கடந்தகால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றி கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “இந்தியா, இலங்கையில் 60 மானியத் திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், தற்போது மேலும் 16 திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. முதலீடுகள் மற்றும் மானியங்கள் மூலமான உதவி அதிகரித்துள்ள நிலையில், கடன் திட்டங்கள், ஒப்பீட்டளவில் குறைவாகவும் வருகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம் அவசியமானதாகும். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுதல் மற்றும் உடனடி சவால்களை சமாளிக்க இருதரப்பு நிதி உதவியை வழங்குதல் ஆகியவற்றுக்கான ஆதரவு தொடர்பில் இந்தியா உறுதியளிக்கின்றது.
மேலும், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான கடன் மறுசீரமைப்பை இலங்கை முடிவுக்குக் கொண்டு வரும் போது, இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் முக்கியமானது.
பிராந்தியத்தில் பரஸ்பர செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, பழைய மனப்பான்மையைக் கடந்து, பகிரப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மேலும், நாங்கள் இணைந்து வளர வேண்டும். செழிப்படைய வேண்டும். நாங்கள் வரலாறு, புவியியல் மற்றும் எதிர்காலத்தினால் இயற்கையாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றோம். அதேவேளை, நாங்கள் ஈடுசெய்ய முடியாதவர்கள். இன்றியமையாதவர்கள் மற்றும் பிரிக்க முடியாதவர்கள்.
அத்துடன், பிளவுகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் இருநாடுகளினதும் பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை” என சுட்டிக்காட்டியுள்ளார்.